அம்பேத்கர் சிலைக்கு  மரியாதை செலுத்த அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி மனு - காவல்துறை பதிலளிக்க உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதி கோரிய இந்து மக்கள் கட்சியின் மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், இந்து மக்கள் கட்சி நிர்வாகி அருண்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ''வரும் ஏப்ரல் 14ம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள். இதனை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதி கோரி காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவுக்கு காவல்துறை இதுவரை பதில் அளிக்கவில்லை. எனவே அம்பேத்கருக்கு மரியாதை செலுத்த அனுமதிக்க வேண்டும். நாங்கள் மாலை அணிவிக்கும்போது உரிய பாதுகாப்பு அளிக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தோஷ், "இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த காலங்களில் மாலை அணிவிக்கச் சென்றபோது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டது. தொடர்ந்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் அவர்கள் செயல்படுவதால், அப்போதைய சூழலை பொறுத்து அவர்கள் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள மனு குறித்து பரிசீலிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த இந்து மக்கள் கட்சி தரப்பு வழக்கறிஞர், "நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், மரியாதை செலுத்த அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, காவல்துறையின் விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யவும், பதிலளிக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை புதன்கிழமைக்கு (ஏப்.12) ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE