மக்களைத் தேடி மேயர் திட்டம் இம்மாத இறுதியில் தொடக்கம்: சென்னை மேயர் பிரியா தகவல்

By கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: மக்களைத் தேடி மேயர் திட்டம் இம்மாத இறுதியில் தொடங்கப்படும் என்று சென்னை மேயர் பிரியா தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சியில், பொதுமக்களிடம் 1913 தொலைபேசி எண், நம்ம சென்னை செயலி, தபால்கள் வாயிலாக புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் பார்வையாளர்கள் நேரம் ஒதுக்கப்பட்டு, பொதுமக்களிடம் மேயர் முதல் அதிகாரிகள் வரை மனுக்களை பெறுகின்றனர். அதேநேரம், பலநேரங்களில் மேயர், அதிகாரிகள் மற்ற நிகழ்ச்சிகள், ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்பதால், அவர்களை சந்திப்பது பொதுமக்களுக்கு பெரும் சிக்கலாக உள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி 2023 – 24ம் பட்ஜெட் கூட்டத்தொடரில், ‘மக்களைத் தேடி மேயர் திட்டம்’ செயல்படுத்தப்படும் என, மேயர் பிரியா அறிவித்தார். அந்தத் திட்டத்தை உடனடியாக அமலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை மாநகராட்சியுடன், குடிநீர் வாரியம், மின் வாரியம், நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மனுக்களையும், இக்கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கலாம். அந்தத் துறைகளுக்கு, புகார் மனுக்கள் மாநகராட்சி சார்பாக அனுப்பி வைக்கப்பட உள்ளது. அடுத்தடுத்த கூட்டங்களில், அத்துறை அதிகாரிகளையும் பங்கேற்க வைக்கவும் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறுகையில், "மக்களைத் தேடி மேயர் திட்டம், இம்மாத இறுதியில் வடசென்னையில் துவங்கப்படும். முதற்கட்டமாக ஐந்து முதல் ஆறு மணி நேரம் குறைதீர் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பொதுமக்களின் வருகை ஆகியவற்றைக் கொண்டு கூட்டத்தின் நேரத்தை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE