எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம்: அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமிப்பது தொடர்பாகவும், இருக்கை விவகாரம் தொடர்பாகவும் அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க ஏற்கெனவே பழனிசாமி தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாமலேயே உள்ளது. இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி பதவியேற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமிப்பது தொடர்பாக அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி சபாநாயகர் அப்பாவுவை கடந்த மாதம் சந்தித்தனர். ஆனால் தற்போது வரை, சட்டப்பேரவையில் இபிஎஸ் அருகில் உள்ள இருக்கையில் தான் ஓபிஎஸ் அமர்ந்திருக்கிறார்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவையில் அதிமுகவினர் இன்று அமளியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பேசிய சபாநாயகர் அப்பாவு, இருக்கை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே நீண்ட விளக்கத்தை அவையில் கொடுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE