தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி தொடரக் கூடாது: மத்திய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை மாற்ற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் துணைத் தலைவர் ஏ.ஜி.மவுரியா நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநில அரசு அனுப்பும் தீர்மானங்கள் நிலுவையில் இருக்கிறதென்றால், அவற்றுக்கு ஒப்புதல் வழங்கவில்லை என்று அர்த்தம் என ஆளுநர் பேசியிருப்பதை, சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. மத்திய அரசு, தனது பிரதிநிதி மூலமாக மாநில அரசின் இறையாண்மைக்கு அறைகூவல் விடுப்பதாகவே மநீம இதைப் பார்க்கிறது.

பல்வேறு விஷயங்களிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தி,மாநில மக்களைப் பதற்றத்திலேயே வைத்துக் கொள்ளமத்திய அரசு முயல்கிறதோ என்று சந்தேகம் எழுகிறது.தமிழக மக்களை அவமதிக்கும் வகையில் பேசியும், செயல்பட்டு வரும் ஆளுநரை மநீம வன்மையாக கண்டிக்கிறது. ஜனநாயக மாண்புகளைக் கேள்விக்குறியாக்கும் ஆளுநரை உடனடியாக மாற்ற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE