சென்னை: தமிழகத்தின் வளமான கலாச்சார சுவையை சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம் கொண்டுள்ளதாக தமிழில் பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
ரூ.1,260 கோடியில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த முனையம், ரூ.1,260 கோடி மதிப்பில் 1.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடம், விமான நிலையத்தின் பயணிகள் சேவைத் திறனை ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகள் என்ற அளவில் இருந்து 30 மில்லியன் பயணிகளாக உயர்த்தும் என்று மத்திய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் புதிய முனையம், கோலம், சேலை, கோயில்கள் போன்ற பாரம்பரிய அம்சங்களைக் கொண்ட தமிழ் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும், இயற்கையான சுற்றுப்புறத்தைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் வளமான கலாச்சார சுவையை சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம் கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்டுவிட்டர் பக்கத்தில் மோடி வெளியிட்டுள்ள பதிவில்,"சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம் இந்த பெருநகர மக்களுக்கும் தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கும் பெரிதும் உதவும். முனைய கட்டிடம் தமிழகத்தின் வளமான கலாச்சாரத்தின் சுவையையும் கொண்டுள்ளது" என்று அதில் கூறியுள்ளார்.