ஆறுமுகநேரியில் மனித நேயத்துடன் முதியவர் உடலை அடக்கம் செய்த போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் இறந்த 78 வயது முதியவர் உடலை உறவினர்கள் அடக்கம் செய்ய முன்வராத நிலையில் போலீஸாரே அடக்கம் செய்தனர். மனிதநேயத்துடன் இச்செயலை செய்த போலீஸாரை எஸ்பி எல்.பாலாஜி சரவணன் பாராட்டினார்.

ஆறுமுகநேரி புறக்காவல் நிலையப் பகுதியில் 78 வயது முதியவர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் பிரபகுமார், வேல்பாண்டியன் மற்றும் முதல் நிலை காவலர் கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டதில், அந்த முதியவர் ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்த தனசீலன் (78) என்பதும், அவர் இப்பகுதியில் சில நாட்களாக சுற்றித் திரிந்ததும் தெரியவந்தது.

அவருடைய மருமகன் மாடத்தங்கம் என்பவரை கண்டுபிடித்து முதியவர் உடலை காண்பித்தனர். அப்போது அவர் இறந்த தனசீலன் தனது மாமனார் (மனைவியின் தந்தை) என்றும், அவர் தனது மனைவியின் சிறுவயதிலேயே குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றதால் தனக்கும் அவருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை, அதனால் அடக்கம் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து தனசீலனை உடலை ஆறுமுகநேரி போலீஸாரே அடக்கம் செய்தனர். மனிதநேயத்துடன் அடக்கம் செய்த ஆறுமுகநேரி போலீஸாரை எஸ்பி எல்.பாலாஜி சரவணன் பாராட்டினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE