“கிளை செயலாளர்களுக்கும் வயிறு இருக்கிறது...” - திமுக அவை தலைவர் பேச்சால் சலசலப்பு

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: கிளை செயலாளர்களுக்கும் வயிறு இருக்கிறது, அவர்களுக்கும் கொஞ்சம் ஈரத்தை காட்டுங்கள் என திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அவைத் தலைவர் ஸ்ரீதர் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

திருப்பத்தூர் நகர திமுக சார்பில் கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் திருப்பத்தூரில் உள்ள தனியார் அரங்கில் நேற்று நடைபெற்றது. திருப்பத்தூர் திமுக மாவட்டச் செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான தேவராஜி தலைமை வகித்தார்.

திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி, நகராட்சி மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். திமுக நகரச் செயலாளரும், ஆவின் பால் தலைவருமான எஸ்.ராஜேந்திரன் வர வேற்றார்.

நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அவைத் தலைவர் ஸ்ரீதர் பேசும்போது, ‘‘சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்சியில் கிளை செயலாளர்கள் தான் ஆணி வேர்.

அவர்களை நன்றாக கவனித்து கொள்ள வேண்டும் என பேசினார். எனவே, திருப்பத்தூர் நகரத்தில் கிளை செயலாளர்களுக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும். 6-வது முறையாக இந்த கூட்டம் நடைபெற வேண்டும். ஆனால், இது முதல் கூட்டமாக தற்போது நடக்கிறது.

திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. எனவே, இங்குள்ள திமுக கிளை செயலாளர்களை நகராட்சி கவுன்சிலர்கள் நல்ல முறையில் கவனிக்க வேண்டும். அனைத்து கிளை செயலாளர்களுக்கும், 36 வார்டு களையும் பிரித்து கொடுக்க வேண் டும். அப்போது, கட்சி வளர்ச்சி பணிகள் நன்றாக இருக்கும்.

சில நாட்களுக்கு முன்பு, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி பேசும்போது, நாடாளுமன்ற தேர்தலும், சட்டப்பேரவை தேர்தலும் 2024-ல் ஒன்றாக நடக்கும் என்றார். அது நடந்து விடும் போல உள்ளது. (இங்கே பத்திரிகையாளர்கள் யாராவது இருக்கிறார்களா? எனக் கேட்டு விட்டு, இருந்தாலும் பரவாயில்லை. நான் எனது மனதில் பட்டதை பேசி விடுகிறேன் என்றபடி, அவர் தனது பேச்சை தொடர்ந்தார்.)

இங்குள்ள மாவட்டச் செயலாளர், சட்டப்பேரவை உறுப்பினர்கள், பால்வளத்துறை தலைவர் ஆகியோருக்கு ஒரு வேண்டுகோள். ஏதேதோ சொல்கின்றனர். அதே போல எங்களுக்கும் 2 சதவீதம் வேண்டாம், 1 சதவீதம் கொடுங்கள். அதுவும் முடியாது என்றால்கால் சதவீதமாவது கொடுங்கள். எங்களுக்கும் வயிறு இருக்கிறது. எங்களுக்கும் சற்று ஈரத்தை காட்டுங்கள்’’ என்றார்.

திமுக அவை தலைவரின் இந்த பேச்சால் அரங்கத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது, இருக்கையில் இருந்து எழுந்த மாவட்டச் செயலாளர் தேவராஜி, அவை தலைவர் ஸ்ரீதரிடம் இருந்து மைக்கை சட்டென வாங்கினார். அதன் பிறகு அவரை ஓரமாக உட்காருமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து, இந்த கூட்டத்துக்கு வந்துள்ள பத்திரிகையாளர்கள் அனைவரும் வெளியே சென்று விடுங்கள். இது எங்கள் கட்சிக்குள்ளாக நடக்கும் கூட்டம். இதில், நாங்கள் எவ்வளவோ ஆலோசனை செய்ய வேண்டியிருக்கும். அதையெல்லாம் உங்களிடம் சொல்ல முடியாது எனக்கூறி கூட்டத்துக்கு வந்த அனைத்து செய்தியாளர்களை யும் வலுக்கட்டாயமாக திமுக கட்சியினர் வெளியேற்றி கூட்ட அரங்கின் பிரதான கதவுகளை மூடினர்.

இக்கூட்டத்துக்காக பல மணி நேரம் காத்திருந்த செய்தியாளர்கள் கூட்டம் தொடங்கிய 10 நிமிடங் களில் அவசர, அவசரமாக வெளி யேற்றப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. அனைத்து செய்தியாளர்களையும் வலுக்கட்டாயமாக திமுக கட்சியினர் வெளியேற்றி கதவு களை மூடினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE