சென்னை: சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என பாஜக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதமர் தமிழகத்துக்கு வரும் போதெல்லாம் ஒரு திருவிழா குதூகலம் கூடி வருகிறது.
பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று (ஏப்.8) சென்னைக்கு வரும் பிரதமரை வரவேற்பதற்காக சாலையின் இருபக்கமும் பொதுமக்களும், பாஜகவின் ஏராளமான தொண்டர்களும் திரளாக நின்று வரவேற்க இருக்கிறார்கள்.
தமிழக மக்கள் மீது தனிப்பட்ட அன்பும், மரியாதையும், பாசமும் கொண்டிருக்கும் பிரதமருக்கு மரியாதை செலுத்தும் வகையில் பல கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரதநாட்டியம், கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் என்று பிரதமரின் வாகனம் செல்லும் பாதை எல்லாம் திருவிழாவாக, தமிழக மக்கள் மகத்தான வரவேற்பை அளிக்க காத்துக் கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக, பாஜகவின் ஒவ்வொரு அணி மற்றும் பிரிவின் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் என்று அனைவரும் வெற்றிகரமாய் இந்த வரவேற்பை நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.