கிருஷ்ணகிரி: மக்கள் உணர்வுகளின் அடிப்படையில்தான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ கூறினார்.
கிருஷ்ணகிரி நகர அதிமுக சார்பில் நேற்று தண்ணீர் பந்தல் திறந்துவைத்து, புதிய உறுப்பினர் சேர்க்கைப் படிவங்களை கட்சியினருக்கு வழங்கிய கே.பி.முனுசாமி பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பழனிசாமிக்கு, செல்லுமிடமெல்லாம் தொண்டர்களும், பொதுமக்களும் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, வெளிநாட்டு நிதியைக் கொண்டு, சதியால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாகக் கூறியுள்ளார். மக்கள் உணர்வுகளின் அடிப்படையில்தான் கடந்த கால அரசு அந்த முடிவு எடுத்தது. உயர்ந்த பதவியில் இருப்பவர் பொதுவெளியில் இப்படிப் பேசுவது அழகல்ல.
நாட்டின் வளர்ச்சியைத் தடுக்க வெளிநாடுகளில் இருந்து எப்படிப்பட்ட சதி வந்தாலும், அதை பிரதமர் மோடி முறியடிப்பார். அவர் தனது கடின உழைப்பாலும், மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளாலும் உலகத் தலைவராக உயர்ந்து வருகிறார்.
» இலங்கை தொன்ட்ரா விரிகுடாவில் சீனாவின் ரேடார் தளம் - இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பதற்றம்
» தினசரி மின் பயன்பாடு 18,252 மெகாவாட்டாக உயர்வு - தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்டது
இதுபோன்ற நடவடிக்கையில் யார் ஈடுபட்டாலும், அவர்களைக் கைது செய்வார். மசோதாக்கள் குறித்து ஆளுநர் பேசியது, அவருடைய சொந்தக் கருத்து. அதைப் பற்றிக் கருத்துகூற விரும்பவில்லை. இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார். மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.