நெல்லை காவல் நிலையங்களில் அத்துமீறல்: உயர்மட்ட விசாரணை அதிகாரியாக அமுதா நியமனம்

By செய்திப்பிரிவு

சென்னை: திருநெல்வேலியில் குற்ற வழக்குகளில் சிக்கிய குற்றம்சாட்டப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர்மட்ட அதிகாரியாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மை செயலாளர் அமுதாவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: "திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய குற்ற எண்.69/2023 என்ற வழக்கில் தொடர்புடைய நபர்களின் பற்களைப் பிடுங்கி அம்பாசமுத்திரம் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும் காவல் துறையினர் துன்புறுத்தியதாக சமூக ஊடகங்களில் வெளியான புகார்கள் தொடர்பாக காவல் நிலை ஆணை 151-இன் கீழ் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் விசாரணை மேற்கொள்ள மார்ச் 26ம் தேதி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரால் உத்தரவிடப்பட்டது.

பல்வீர் சிங்

மேலும், இந்நிகழ்வில், பல்வீர் சிங் மார்ச் 29ம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் பணியாற்றி வந்த காவலர்கள் ராஜ்குமார், போகபூமன், சந்திரசேகரன், ராஜகுமாரி, ஏ.பெருமாள், என்.சக்தி நடராஜன், எம்.சந்தானகுமார், வி.மணிகண்டன் ஆகியோர் ஆயுதப்படைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி புகார்கள் தொடர்பாக, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு, தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையினை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு ஏப்ரல் 3ம் தேதி சமர்ப்பித்துள்ளார். சேரன்மகாதேவி சார் ஆட்சியரின் முதற்கட்ட விசாரணை அறிக்கை மற்றும் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் அமைந்துள்ள வேறு காவல் நிலையங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதாக புகார்கள் வரப்பெற்றுள்ளதை கருத்தில் கொண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இந்நிகழ்வு தொடர்பாக ஓர் உயர்நிலை அதிகாரி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட ஏப்ரல் 4ம் நாளிட்ட கடிதத்தின் மூலம் அரசிற்கு பரிந்துரை செய்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில், தற்போது பணியிடை நீக்கத்தில் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர்சிங் மீதும் மற்ற காவல் துறையினர் மீதும் விசாரணைக் கைதிகளைத் துன்புறுத்தியதாக வரப்பெற்ற புகார்கள் தொடர்பாகவும், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதாகவும் வரப்பெற்றுள்ள புகார்கள் குறித்தும், விரிவான விசாரணை மேற்கொள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் அமுதாவை உயர்மட்ட விசாரணை அதிகாரியாக நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஒரு மாத காலத்திற்குள் தமது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE