பிரதமர் மோடி வருகை: சென்னையில் சனிக்கிழமை போக்குவரத்து மாற்றங்கள் என்னென்ன?

By செய்திப்பிரிவு

சென்னை: பிரதமர் மோடி நாளை (சனிக்கிழமை) கலந்துகொள்ளும் விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகளிலும், ஐஎன்எஸ் அடையார் முதல் சென்டரல் ரயில் நிலையம் வரையிலும், சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் விவேகானந்தர் இல்லம் வரையிலும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்து மெதுவாக செல்ல வாய்ப்புள்ளது என்று சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னைப் பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரதமர் 08.04.2023 அன்று சென்னைக்கு வருகை தந்து புதிய விமான நிலைய முனையம் திறந்து வைக்கவும், சென்டரல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைக்கவும் மற்றும் காமராஜர் சாலை விவேகானந்தர் இல்லத்தில் ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவிலும் பங்கேற்க உள்ளார்.

பிரதமரின் சென்னை வருகையின் போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகளிலும், ஐஎன்எஸ் அடையார் முதல் சென்டரல் ரயில் நிலையம் வரையிலும், சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் விவேகானந்தர் இல்லம் வரையிலும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்து மெதுவாக செல்ல வாய்ப்புள்ளது என்பதை பயணிகளுக்கு தெரிவித்து கொள்ளப்படுகிறது.

பிரதமரின் விவேகானந்தர் இல்ல வருகையின் போது காந்தி சிலை அருகே உள்ள கலங்கரை விளக்கத்தில் இருந்து வாகனங்கள் ஆர்.கே. சாலைக்கு திருப்பி விடப்படும். அங்கிருந்து நடேசன் சாலை சந்திப்பில் ஐஸ் ஹவுஸ், ரத்னா கபே, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை சந்திப்பு வழியாக தொழிலாளர் சிலை அல்லது அண்ணாசாலைக்கு வலதுபுறம் திரும்பலாம்.

போர் நினைவிடத்தில் இருந்து வெளிச்செல்லும் வாகனங்கள் தொழிலாளர் சிலையிலிருந்து வாலாஜா சாலையில் அண்ணாசாலை நோக்கி அல்லது திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை சந்திப்பில் திருப்பி விடப்படும். தேவைப்பட்டால் வாகனங்கள் போர் நினைவிடத்தில் இருந்து வாலாஜா பாயின்ட் வழியாக அண்ணாசாலை நோக்கி கொடி ஊழியர்கள் சாலையில் திருப்பி விடப்படலாம். இந்த மாற்று பாதையானது மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படுத்தப்படும். மேலும் வணிக வாகனங்களுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 8 மணி வரை இடையிடையே திசைமாற்றம் கீழ்கண்டவாறு செயல்படுத்தப்படும்.

எனவே வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.வாகன ஓட்டிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE