சென்னை: தமிழகத்தில் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுப் பணிகளைத் தொடங்கிவைத்த முதல்வர் ஸ்டாலின், கீழடி புனை மெய்யாக்க செயலியை அறிமுகம் செய்துவைத்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் 15 லட்சம் ஆண்டுகள் மனிதகுல வரலாற்றுத் தொன்மை கொண்ட நிலப்பரப்பாகும். இதன் தொன்மையைக் கண்டறிய, முறையான அகழாய்வுகள் அவசியம்.
தமிழக அரசின் தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வுகளின் அறிவியல் அடிப்படையிலான பகுப்பாய்வு முடிவுகள் மூலம் தமிழக வரலாற்றில் புதிய வெளிச்சம் ஏற்பட்டுள்ளது.
அண்மைக்கால தொல்லியல் சாதனைகள் மூலம் நமது புகழ்பெற்ற, நீண்ட வரலாற்றில் காணும் பண்பாடு மற்றும் காலவரிசை இடைவெளிகளை நிரப்புவதற்கு நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும்.
» “மசோதாவை நிறுத்தி வைத்தால் நிராகரிப்பதாகவே அர்த்தம்” - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சின் முழு விவரம்
நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்காக தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி, வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல், வரலாற்றுக் காலம் வரையிலான தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழாய்வு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டில், சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதைச் சுற்றியுள்ள அகரம், கொந்தகையில் உள்ள தொல்லியல் தளங்களில் 9-ம் கட்ட ஆய்வு, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் 3-ம் கட்டம், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் 2-ம் கட்டம், திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டியில் 2-ம் கட்டம், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டியில் முதல்கட்டம், புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் முதல் கட்டம், தருமபுரி மாவட்டம் பூதிநத்தத்தில் முதல் கட்டம், திருவள்ளூர் மாவட்டம் பட்டறைப்பெரும்புதூரில் 3-ம் கட்டமாக ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன.
கடந்த ஆண்டு அறிவித்தவாறு, தமிழக தொல்லியல் துறை, இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை இணைந்து தண்பொருநை (தாமிரபரணி) ஆற்றின் முகத்துவாரத்துக்கு எதிரில் சங்ககாலக் கொற்கைத் துறைமுகத்தின் தொல்லியல் வளத்தைக் கண்டறிய முன்கள புலஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த ஆய்வில் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில், கடல் அகழாய்வு செய்யத் திட்டமிடப்படும்.
இந்தப் பணிகளுக்காக பட்ஜெட்டில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்தார்.
மேலும், கீழடி அருங்காட்சியகத்துக்காக கீழடி புனை மெய்யாக்க செயலியை (Keeladi Augment Reality App) தமிழக தொல்லியல் துறை உருவாக்கியுள்ளது. கீழடி அகழாய்வுகளில் வெளிக்கொணரப்பட்டுள்ள 200 தொல்பொருட்களை புனை மெய்யாக்கம் மற்றும் முப்பரிமாணத்தில் பார்க்கலாம். கலைப் பொருட்கள் பற்றிய தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். இந்த செயலியையும் முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார். பார்வையாளர்கள் தங்களின் செல்போன் வாயிலாகவே, அகழாய்வுக் குழி மற்றும் தொல்பொருட்களைப் பார்வையிடும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, துறைச் செயலர் பி. சந்திரமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காணொலி வாயிலாக சிவகங்கை, திருவண்ணாமலை ஆட்சியர்கள் பங்கேற்றனர்.