சென்னை: பரந்தூர் விமான நிலையத்திற்கான விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை தயார் செய்ய விரைவில் ஆலோசகர் நிறுவனம் நியமிக்கப்படும் என்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையத்துக்காக சுமார் 4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அரசு புறம்போக்கு நிலங்கள் போக 2,000 ஏக்கர் அளவுக்கு விவசாய நிலங்களும், 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் கையகப்படுத்தப்பட உள்ளன. அதே வேளையில், நிலம் கையகப்படுத்துதல் பணி மற்றும் விமான நிலையம் திட்டத்திற்கு 13 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கிராம சபைக் கூட்டங்களில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவருகிறது. இதுவரை, பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 5 முறை கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆலோசகர் நிறுவனம் நியமிக்கப்படும் என்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில்,"சென்னை அருகே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு தேவையான விரிவான தொழில்நுட்ப பொருளாதார ( DTER ) அறிக்கையை தயாரிப்பதற்காக ஒரு ஆலோசகர் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.அதற்கான ஒப்பந்தப் புள்ளியை டிட்கோ நிறுவனம் கூறியுள்ளது. ஆலோசகர் நிறுவனம் விரைவில் நியமிக்கப்படும்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.