5 இளம் அர்ச்சகர்கள் உயிரிழப்பு: மூவரசம்பட்டு குளம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது, 5 இளம் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த நிகழ்வு நடந்த மூவரசம்பட்டு கோயில் குளம் தடை செய்யப்பட்ட பகுதியாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நங்கநல்லூர் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது, 5 இளம் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து,உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும், தமிழக சட்டப் பேரவையில் இன்று (ஏப்.6) இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, 5 பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்ததற்கு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.6) கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு பதில் அளித்த, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "இனிமேல் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.

இந்நிலையில், மூவரசம்பட்டு கோயில் குளம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஊராட்சி நிர்வாகம் சார்பில் இந்த குளம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, குளத்திற்கு முன்பாக அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE