சென்னை: கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும் உறுப்பினர் சேர்க்கை குறித்தும் விவாதிக்க அதிமுக அவசர செயற்குழு கூட்டம் வரும் ஏப்ரல் 16 ஆம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தல் குறித்தும் கழகத்தில் உறுப்பினர்களை சேர்ப்பது சம்பந்தமாகவும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவசர செயற்குழு கூட்டம் வருகின்ற 16.4.2023 – ஞாயிற்றுக் கிழமை பகல் 1.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.
கழக செயற்குழு உறுப்பினர்களான, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.