மதுரை: தென் மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் ஆடல்- பாடல், புரவி எடுத்தல், நடன- நாட்டியம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தர போலீஸாருக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி ஜி.இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, கோயில் திருவிழாக்களில் ஆடல்-பாடல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவதில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்து 2019-ல் டிஜிபி சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார்.
ஆபாச நடனம், பாடல்கள் இடம்பெறக் கூடாது, நிகழ்ச்சியைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு நிபந்தனைகள் அந்த சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ளன. அதன் அடிப்படையில் மனுதாரர்களின் மனுக்களைச் சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலனை செய்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.