“தமிழகத்தில் நிலக்கரி எடுக்க முதல்வர் ஸ்டாலின் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்” - அமைச்சர் உதயநிதி

By சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூர்: தமிழகத்தில் நிலக்கரி எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு துறையைச் சார்ந்த வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று விட்டு, செய்தியாளர்கள் சந்திப்பில் உதய நிதி பங்கேற்றார். அப்போது அவர் கூறியது: “தஞ்சாவூரில் மார்ச் 14-ம் தேதி ஆய்வு கூட்டம் நடத்தினோம். அதனுடைய தொடர் நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக இக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில், என்னென்ன திட்டங்கள்? எவ்வளவு முடிக்கப்பட்டுள்ளது? எனக் கேட்டறிந்து, மீதமுள்ள திட்டங்களை விரைந்து முடிக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

பூமாலை வணிக வளாகம், மகளிர் சுய உதவிக் குழுக் கட்டடங்கள் புனரமைப்பு பணியை விரைவில் முடிக்க வேண்டும், தமிழக முதல்வர் திறப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம் எனவும் கூறியிருக்கிறோம். இது தொடர்பாக அரசு அலுவலர்களும் விளக்கம் அளித்தனர். முதல்வரின் ஆணைப்படி அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இளைஞரணிக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்பேற்கும்போது, ஒவ்வொரு தொகுதியிலும் 10 ஆயிரம் பேர் சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில், 85 சதவீதம் முடிவடைந்துவிட்டது. இப்போது, கட்சியில் உறுப்பினர் சேர்க்கை மேற்கொள்ளுமாறு தலைவர் கூறியுள்ளார். அப்பணியை செய்து வருகிறோம்.

தற்போது திமுகவில் 1 கோடி பேரை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் அடிப்படையில் நிர்வாகிகள் சேர்க்கும் பணி நடந்து வருகிறது. மேலும் தொகுதி வாரியாக இளைஞர் அணிக்கு திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடந்து வருகிறது. அடுத்த சில நாட்களில் ஒன்றிய அளவில் கூட்டம் நடைபெறும்.

தமிழகத்தில் நிலக்கரி எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். இது தொடர்பாக அவர் பிரதமருக்கு அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். நாளை நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் மன்னார்குடி எம்.எல்.ஏ. ராஜா கவனம் ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரவுள்ளார்” எனத் தெரிவித்தார்.

பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்பி திரு.எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், கா.அண்ணாதுரை, வருவாய் கூடுதல் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் எச்.எஸ். ஸ்ரீகாந்த், மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE