மருத்துவப் படிப்பிலில் இருந்து 2 நாட்களில் விலகிய மாணவியின் சான்றிதழ்களை ஒப்படைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: மருத்துவ மேற்படிப்பிலிருந்து 2 நாட்களில் விலகிய மாணவி 15 லட்ச ரூபாய் செலுத்த வேண்டுமென்ற சென்னை மருத்துவ கல்லூரி முதல்வரின் உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்த உயர் நீதிமன்றம், மாணவியின் சான்றிதழை திருப்பி வழங்க உத்தரவிட்டுள்ளது.

2019-ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்பிற்கான கலந்தாய்வில் இடம் கிடைத்த மாணவி அஷ்ரிதா சென்னை மருத்துவக் கல்லூரியில் மே 1-ம் தேதி சேர்ந்தார். அதன்பின்னர் இரண்டு நாட்களிலேயே சொந்த காரணங்களுக்காக படிப்பை தொடர முடியவில்லை எனக் கூறி, தன் சான்றிதழ்களை திருப்பித் தரும்படி கோரினார். ஆனால் படிப்பை பாதியில் நிறுத்தினால் 15 லட்ச ரூபாய் செலுத்த வேண்டுமென்ற விதிப்படி, பணத்தை செலுத்த கல்லூரி முதல்வர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து மாணவி அஷ்ரிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மாணவர் சேர்க்கைகான கடைசி தேதி 2019ம் ஆண்டு மே 31 அன்று முடிவடையும் நிலையில், மே 3ம் தேதியே படிப்பிலிருந்து விலகுவதாக மாணவி விண்ணப்பித்துள்ளதால், அவரது சான்றிதழ்களை வழங்கு வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து மருத்துவக் கல்லூரி தேர்வுக் குழு, கல்லூரி டீன் ஆகியோர் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு மனுக்கள் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது தேர்வுக் குழு மற்றும் கல்லூரி முதல்வர் தரப்பில், "மருத்துவப் படிப்புகளில் சேரும், ஒவ்வொரு மாணவருக்காகவும் அரசு பல லட்ச ரூபாய்களை செலவு செய்கிறது. இப்படி ஒரு இடம் காலியாவதால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதுடன், மதிப்புமிக்க மருத்துவ படிப்பில் ஒரு இடம் வீணாகிறது. எனவே இந்த வழக்கில் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேதி முடிவதற்கு முன்பாகவே மாணவி தனக்கு வழங்கபட்ட இடத்தை ஒப்படைத்து விட்டதால், அந்த இடத்தை அவருக்கு அடுத்தபடியாக பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு ஒதுக்கி இருக்க முடியும். கட்டணம் வசூலிப்பது தொடர்பான விளக்க குறிப்பில் சில தெளிவின்மை இருக்கத்தான் செய்கிறது.

எனவே, சான்றிதழ்களை பெற ரூ.15 லட்சத்தை மாணவி செலுத்த வேண்டுமென பிறப்பித்த உத்தரவு செல்லாது எனக்கூறி, தனி நீதிபதி உத்தரவை உறுதிசெய்து, அரசின் மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், 2 வாரத்தில் மாணவியின் சான்றிதழ்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE