நிலக்கரி இறக்குமதி மோசடி குற்றச்சாட்டு: அகமது புகாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: நிலக்கரி இறக்குமதி மோசடி குற்றச்சாட்டில் கைதான அகமது ஏ.ஆர்.புகாரியின் ஜாமீன் மனுவை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நிலக்கரி இறக்குமதி செய்த விவகாரத்தில் 564.48 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, நிலக்கரி இறக்குமதி நிறுவனமான கோஸ்டல் எனர்ஜி மற்றும் அதன் இயக்குநரான அகமது ஏ.ஆர். புகாரி மீது கடந்த 2018ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த மோசடி மூலம் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை அகமது புகாரி, சட்ட விரோதமாக தனது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுப்பி , மீண்டும் இந்திய நிறுவனங்களுக்கு பரிமாற்றம் செய்ததாக கடந்த 2020-ம் ஆண்டு சட்ட விரோத பண பரிமாற்றசட்டத்தின் கீழ் அகமது புகாரியை கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி அகமது புகாரி, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஏ.கே.மெகபூப் அலிகான் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அகமது புகாரி தரப்பில், "இந்த வழக்கில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மனுதாரர் கைது செய்யப்பட்டார். ஓராண்டுக்குப் பிறகும், விசாரணை முடியவில்லை. எனவே, சட்டப்பூர்வ ஜாமீன் வழங்க வேண்டும்" என்று வாதிடப்பட்டது.

அப்போது அமலாக்கத்துறை தரப்பில், "அகமது புகாரி மீதான விசாரணை முடிந்துவிட்டாலும், அவருடன் தொடர்புடைய பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் குறித்தும், அயல்நாட்டில் செய்யப்பட்ட முதலீடுகள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. எனவே, சட்டப்பூர்வ ஜாமீன் வழங்க வேண்டிய அவசியம் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அகமது புகாரி ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE