சென்னை: நீரிழிவு நோயை இயலாமையாகக் கருதி, எம்பிபிஎஸ் படிப்பில் இடஒதுக்கீடு கோரி மாணவி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீட் தேர்வு எழுதி, மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்த மாணவி ஒருவர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தன்னுடைய இயலாமையாகக் கருதி, இடஒதுக்கீடு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "ஒரு நாளுக்கு இரண்டு முறை இன்சுலின் செலுத்திக் கொள்ளும் தனக்கு சிறப்பு பிரிவில் மருத்துவ மாணவர் சேர்க்கை வழங்கி உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது மருத்துவக் கல்வி இயக்குனரக தேர்வுக் குழு தரப்பில், "நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களை இயலாமை உடையவர்களாக கருதுவது குறித்து மாநில அரசுதான் கொள்கை முடிவு எடுக்க வேண்டும். இதில், தேர்வுக் குழுவுக்கு எந்தவிதமான பங்கும் இல்லை" எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, இதுதொடர்பாக மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.