சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு 150 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கரோனா தொற்று தினசரி பாதிப்பு 200-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது.
எக்ஸ்பிபி மற்றும் பிஏ2 வகை ஒமைக்ரான் கரோனா வைரஸ் பரவலை தடுக்க, முன்னெச்சரிக்கையாக மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடந்த 1-ம் தேதி முதல் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது. மருத்துவமனைகளில் நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டஅனைவரும் முகக்கவசம் அணிகின்றனர்.
முகக்கவசம் இல்லாதவர்களுக்கு மருத்துவமனை தரப்பில் இலவசமாக முகக்கவசம் வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தியேட்டர்கள், குளிர்சாதன வசதி கொண்ட அரங்கங்களில் இருப்பவர்கள் முகக்கவசம்அணியுமாறு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கரோனா தொற்று பாதிப்பு திடீரென்று அதிகரிக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள், மருந்துகள் தயார் நிலையில் வைக்கும்படி மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
» மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு மேல்சித்தாமூர் பார்சுவநாதர் கோயிலில் தேரோட்டம்
» தமிழகத்திலிருந்து கடத்திய போதை பொருள் இலங்கை தலைமன்னாரில் பறிமுதல்
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு 150 படுக்கைகள், மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் 4 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதில் ஒருவர் மட்டும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.