கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் ஹரிபத்மன் கைது 

By செய்திப்பிரிவு

சென்னை: கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பேராசிரியர் ஹரிபத்மனை காவல்துறையினர் கைது செய்தனர்.

மத்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா நாட்டியக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவிகளுக்கு, பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் சார்பில் கமிட்டி அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.

ஆனால், அந்த விசாரணையில், கல்லூரியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யான தகவல் பரப்பப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு டிஜிபிக்கு, தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்துமாறு, காவல் ஆணையருக்கு டிஜிபி உத்தரவிட்டார்.

இதற்கிடையில், புகாருக்கு உள்ளான பேராசிரியர் ஹரிபத்மன், உதவியாளர்கள் சாய்கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மாநில மகளிர் ஆணையத் தலைவி குமரி விஜயகுமாரி நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். இந்த விவகாரம் சட்டப்பேரவையில் எழுப்பப்பட்டது. குற்றச்சாட்டு உறுதியானால், யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

இதற்கிடையில், கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் மாணவி ஒருவர், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், பேராசிரியர் ஹரிபத்மன் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிவித்திருந்தார். இதையடுத்து, பேராசிரியர் ஹரிபத்மன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹரிபத்மனை தனிப்படை காவல் துறையினர் சென்னையில் இன்று கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE