ஆட்டோ ஓட்டுநர்கள் தமிழகம் முழுவதும் மே 9-ல் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் மே 9-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் எனவும் சிஐடியு சங்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் கூறியதாவது: தமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை பொருத்தவரை, கடந்த 2013-ம் ஆண்டு 1.8 கி.மீ.தூரத்துக்கு ரூ.25, அடுத்த ஒவ்வொரு கி.மீ-க்கு தலா ரூ.12, காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்துக்கு ரூ.3.5, இரவு நேரத்தில் இந்த கட்டணத்தை இரட்டிப்பாக வசூலிக்க அனுமதித்து போக்குவரத்துத் துறை உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் அரசு மீட்டர் வழங்காத காரணத்தால் இந்தகட்டண உயர்வு அமல்படுத்தப்படவில்லை. மேலும் அந்த சமயத்தில் லிட்டர் பெட்ரோல் ரூ.60,டீசல் ரூ.45 என்ற அளவில் இருந்தது. தற்போது பெட்ரோல், டீசல் விலையோ கட்டுக்கடங்காமல் உள்ளது.

கடந்த ஆண்டு போக்குவரத்துத் துறை பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், 6 மாதங்களுக்கு மேலாகியும் கட்டணத்தை அறிவிக்கவில்லை. எனவே, ஆட்டோ மீட்டர் கட்டணத்தை விரைந்து அறிவிக்க வேண்டும்.

ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களுக்கான முன்பதிவு செயலியை அரசு விரைந்து தொடங்க வேண்டும். பைக் டாக்சிகளை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மே 9-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE