மதுரை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

By செய்திப்பிரிவு

மதுரை: மதுரையில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டன. மதுரை சமயநல்லூர் வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் கார்த்திகா(47). இவரது கணவர் செபாஸ்டின். சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானார். கார்த்திகா 2 மகன்கள், ஒரு மகளுடன் வசித்து வந்தார்.

கடந்த மார்ச் 30-ல் தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் வேலைக்குச் சென்றபோது தேனூர் பேருந்து நிலையம் அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந் தார்.

மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கார்த்திகாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர். அவரது கல்லீரல், கண், சிறுநீரகம், நுரையீரல், இதயம் ஆகிய உறுப்புகள் மதுரை, நெல்லை அரசு மருத்துவமனைகளுக்குத் தானம் அளிக்கப்பட்டன.

அவரது உடல் உறுப்புகளை ஆம்புலன்ஸ்கள் மூலம் விரைவாகக் கொண்டு செல்ல ஆங்காங்கே போக்குவரத்தை நிறுத்தி போலீஸார் உதவி செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE