“மக்களவைத் தேர்தலுக்கும் பாஜக கூட்டணியுடன்தான் அதிமுக பயணிக்கிறது” - இபிஎஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: “மக்களவைத் தேர்தலுக்கும் பாஜக கூட்டணியுடன்தான் அதிமுக பயணிக்கிறது” என்று எதிர்க்கட்சித் தலைவர் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அவர் இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "இரண்டு நாட்களுக்கு முன்பு நிதியமைச்சர் சட்டமன்றத்தில் அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் 27 சதவீத அறிவிப்புகள்தான் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பணிகள் குறித்தும், 110 அறிவிப்புகள் குறித்து நிதியமைச்சர் ஏற்கெனவே வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், அதிமுக ஆட்சியில் 1704 அறிவிப்பு வெளியிப்பட்டுள்ளதாகவும், இதில் 1167 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 492 பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்படி 68 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த உண்மையை மறைத்து, திட்டமிட்டு அதிமுக ஆட்சியில் எந்த பணியும் நடைபெறவில்லை என்று தவறான அவர் செய்தியை கூறியுள்ளார்.

சென்னை மாநகராட்சியில் அட்சய பாத்திரம் திட்டம் மூலம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இந்த் திட்டத்தை முதலில் தொடங்கியது அதிமுகதான். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர் குலைந்துவிட்டது. போதைப்பொருள் தங்கு தடையின்றி கிடைக்கிறது. இதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றால் மறைத்து பேசுகிறார்கள்" என்றார்.

அட்சய பாத்திரம் அமைப்புக்கு ஆளுநர் நிதி வழங்கிய விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "ஆளுநர் குறித்து விமர்சனம் செய்யக் கூடாது. இதுதான் மரபு. நீங்க கேட்ட காரணத்தால் பதில் கூறுகிறேன். ஆளுநருக்கு சில அதிகாரங்கள் உள்ளன. இது ஆளுநரின் நிதி. நலத் திட்டத்திற்குதான் இந்த நிதியை ஆளுநர் கொடுத்துள்ளார்" என்றார்.

அதிமுக கூட்டணி தொடர்பான கேள்விக்கு, "பாஜக கூட்டணியில்தான் அதிமுக உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணியில்தான் போட்டியிட்டோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கும் கூட்டணியோடுதான் பயணம் செய்து வருகிறோம்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE