கோவை | விவசாய பயன்பாட்டுக்கான தேவை குறைவால் முடங்கிய பம்ப்செட் தொழில்: கோடையை நம்பியிருப்பதாக தொழில்துறையினர் தகவல்

By செய்திப்பிரிவு

கோவை: வீடு மற்றும் விவசாய பயன்பாட்டுக்கான பம்ப்செட் தேவை குறைந்துள்ளதால் கோவை மாவட்டத்தில் பம்ப்செட் தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் வீடு மற்றும் விவசாய தேவைக்கான பம்ப்செட் பயன்பாட்டில் 55 சதவீதம் கோவையிலுள்ள தொழில் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்பட்டவை. கோவையில் 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஒரு லட்சம் பேர் இத்தொழிலில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

0.5 ஹெச்பி முதல் அதிகபட்சமாக 50 ஹெச்பி மற்றும் அதற்கு மேல் திறன் கொண்ட பம்ப்செட் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்படுகின்றன. ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 லட்சம் வரை பம்ப்செட் பொருட்கள் பல மாடல்களில் விற்பனை செய்யப்படுகின்றன. மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக கடந்த 8 மாதங்களாக பம்ப்செட் தொழில் நலிவடைந்துள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (சீமா) தலைவர் விக்னேஷ் கூறியதாவது: பம்ப்செட் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வழக்கமாக ஆகஸ்ட், செப்டம்பரில் சீசன் தொடங்கிவிடும். ஆனால் இந்தாண்டு தற்போது வரை விவசாய பயன்பாட்டுக்கான பம்ப்செட் தேவை சந்தையில் அதிகரிக்கவில்லை. வீடுகளுக்கான பம்ப்செட் தேவை மட்டும் சிறிதளவு உயர்ந்துள்ளது. நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் கோவை மாவட்டத்தில் பல குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன.

பெரிய நிறுவனங்களில் வாரத்தில் மூன்று நாட்கள் வரை கட்டாய விடுமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல், மே மாதம் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். இதனால் நாடு முழுவதும் வீடு, விவசாய பம்ப்செட் தேவை அதிகரிக்கும் என்றும், பம்ப்செட் தொழில் புத்துயிர் பெறும் என்றும் நம்பி தொழில்முனைவோர் காத்திருக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (கோப்மா) தலைவர் மணிராஜ் கூறும்போது, ‘‘குறுந்தொழில்முனைவோர் பலர் நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் நிறுவனங்களை மூடிவிட்டனர். கோவை பம்ப்செட் தொழில் அழிவுக்கு மூலப்பொருட்கள் விலை உயர்வு மற்றும் ஜிஎஸ்டி சார்ந்த பிரச்சினைகளே காரணம்,’’என்றார்.

தமிழ்நாடு பம்ப் உற்பத்தியாளர்கள் சங்க (டேப்மா) தலைவர் கல்யாண சுந்தரம் கூறுகையில், ‘‘வீட்டு தேவைக்கான பம்ப்செட் தேவை சற்று அதிகரித்து மீண்டும் குறைந்துள்ளது. நிதியாண்டின் இறுதி மாதம் என்பதால் பம்ப்செட் தொழில் சற்று மந்தமாக உள்ளது. ஏப்ரல் முதல் தொழில் புத்துயிர் பெறும் என நம்புகிறோம்,’’என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்