விழுப்புரம் ஆசிரம நிர்வாகிகள் ஜாமீன் கோரிய வழக்கு: சிபிசிஐடி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு 

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஒவ்வொருவர் மீதான குற்றச்சாட்டுகள் என்னென்ன என்பது குறித்தும், அவர்களுக்கு எதிராக திரட்டப்பட்ட ஆதாரங்கள் தொடர்பாகவும் விரிவாக பதில் மனு தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த ஆதரவற்றோர் காணாமல் போனதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆசிரம நிர்வாகிகள் ஜுபின் பேபி, அவரது மனைவி மரியா உள்பட ஏழு பேர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில், 18 ஆண்டுகளாக ஆசிரமம் நடத்தி வரும் எங்கள் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. தற்போது காவல் துறையினர் வேண்டுமென்றே எங்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்ட 4000 பேரை நாங்கள் மீட்டுள்ளோம். இதுவரை எங்கள் மீது புகார் அளிக்கப்படாத நிலையில், போலீஸாரே தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்று வாதிடப்பட்டிருந்தது. இதையடுத்து வழக்கில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஒவ்வொருவர் மீதான குற்றச்சாட்டுகள் என்னென்ன என்பது குறித்தும், அவர்களுக்கு எதிராக திரட்டப்பட்ட ஆதாரங்கள் தொடர்பாகவும் விரிவாக பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஏப்ரல் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE