ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீது நாளை விசாரணை

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது நாளை விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களை தனி நீதிபதி குமரேஷ்பாபு நேற்று நிராகரித்து தீர்ப்பளித்தார். காலை 10.30 மணிக்கு அவர் தீர்ப்பளித்து முடித்தார்.

உடனே இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் அமர்வில் ஓபிஎஸ் தரப்பு மூத்த வழக்கறிஞர் மணிசங்கர் முறையீடு செய்தார்.

அதை ஏற்ற நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவை இன்று (மார்ச் 29) விசாரிப்பதாக தெரிவித்தனர். ஓபிஎஸ் தரப்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமியும், மனோஜ்பாண்டியன் தரப்பில் வழக்கறிஞர் இளம்பாரதியும் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தனி நீதிபதி உத்தரவின் சான்று அளிக்கப்பட்ட நகல் இல்லாததால் ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நாளை (மார்ச் 30) நடைபெறும் என்று இரு நீதிபதிகள் அமர்வு அறிவித்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE