கிருஷ்ணகிரி கொலையில் கைதான சங்கர் கட்சிப் பொறுப்பில் இல்லை: அதிமுக மாவட்டச் செயலாளர்

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சங்கர் அதிமுக.,வில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறானது என, கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ''கடந்த 2021-ல் நடந்த அதிமுக, அமைப்புத் தேர்தலில், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியம், பெரியமுத்துார் ஊராட்சி, புளுகான் கொட்டாய் கிளை நிர்வாகிகளாக, அவைத்தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் கண்ணாயிரம், இணைச் செயலாளர் காவேரியம்மாள், துணைச் செயலாளர்கள் மாதேஸ்வரி, கணேசன், பொருளாளர் சரவணன், மேலமைப்புப் பிரதிநிகள் சிவரஞ்சினி, மணி ஆகியோர் மட்டுமே பொறுப்பில் நியமிக்கப்பட்டனர்.

இதுவரை இந்த பொறுப்புகளுக்கு வேறு யாரும் நியமிக்கப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது நடந்து வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் ஸ்டாலின், புளுக்கான் கொட்டாய் கிளைச் செயலாளர் சங்கர் என தவறாகக் குறிப்பிட்டுள்ளார். சங்கர் ஒரு உறுப்பினர் மட்டுமே. அவர் அதிமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.'' இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE