ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதுச்சேரியில் விரைவில் தடை சட்டம்: திமுக, பாஜக உட்பட அனைத்து கட்சிகளும் ஆதரவு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: மத்திய அரசு அனுமதி பெற்று ஆன்லைன் விளையாட்டுகளை புதுச்சேரியில் தடை செய்ய விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார். திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை அரசு ஏற்று பாஜக உட்பட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

புதுவை சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்யும் கவனஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்து, எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசுகையில்: ''சுற்றுலா மற்றும் ஆன்மீகத்திற்கு புகழ்பெற்ற புதுவை மாநிலத்தில் சமீப காலமாக ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு பலரும் அடிமையாகி வருகின்றனர். இந்த விளையாட்டில் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மூழ்குவதும், அதன் காரணமாக பணத்தை இழந்து, தற்கொலை முயற்சியில் ஈடுபடும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த விளையாட்டுக்களை வீடுகளில் இருந்து தான் விளையாடுகிறார்கள். அதை 'கூகுள் பிளே ஸ்டோர்' மற்றும் 'ஆப்பிள் ஆப் ஸ்டோர்' ஆகியவை தான் கண்டறிய முடியும் என்ற நிலை உள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து அந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தமிழக முதலமைச்சர் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிப்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்தார். அந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்கான சட்டத்தை இயற்றி, அந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்யும் உத்தரவை மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் இருந்து சென்றால் மட்டுமே அந்த விளையாட்டுக்களை தடை செய்யும் நிலை உள்ளது. எனவே புதுவை மாநிலத்திலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிப்பது சம்பந்தமாக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் அதனை அரசின் தீர்மானமாக இயற்றி, ஆளுநர் ஒப்புதலோடு, மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்'' என்றார்.

இதைத்தொடர்ந்து திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், சம்பத், செந்தில்குமார், கென்னடி ஆகியோரும் பேசினர். தொடர்ந்து பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம், ''இளைஞர்கள் நலனைக் காக்க ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை அவசியம். இதை அரசு தீர்மானமாக கொண்டுவர பாஜக ஆதரவு தெரிவிக்கும்'' என்றார்.

தொடர்ந்து அமைச்சர் லட்சுமிநாராயணன் பதிலளித்து பேசுகையில், "அரசு தீர்மானத்தை நிறைவேற்ற கோரிக்கை வைத்தனர். இதில் அரசுக்கு மாற்றுக் கருத்து இல்லை. கடந்த 11.6.2022ல் இதுதொடர்பான தமிழக அரசு சட்டம் கொண்டுவர உள்ளதாக தி இந்து நாளிதழில் செய்தி வெளியானபோதே சட்டத்துறையிடம் விவாதம் நடத்தினோம். மேலும் திமுக எம்எல்ஏ சம்பத் முன்மாதிரி சட்டத்தை அளித்திருந்தார். அதில் உள்ள சாராம்சங்களையும் பரிசீலித்துள்ளோம். காவல்துறை, வருவாய்த்துறைக்கும் கருத்துரு கேட்டு அனுப்பியுள்ளோம். தற்போது தடை சட்டம் சட்டத்துறையின் வசம் உள்ளது.

அமைச்சரவை ஒப்புதல் பெற்று புதுவை சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றப்படும். அப்போது எம்எல்ஏக்கள் பிரிவு வாரியாக சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ளலாம். பொதுவாக மாநில அரசுகள் தண்டனை சட்டத்தை நிறைவேற்றினால் அதற்கு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதற்கான ஒப்புதல் பெறவும் மத்திய அரசை அணுகியுள்ளோம். இதனால் மத்திய அரசு அனுமதி பெற்று புதுவையில் விரைவில் ஆன்லைன் விளையாட்டு தடை சட்டம் கொண்டு வருவோம்" என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE