தமிழ்நாடு பட்ஜெட் 2023: நகைக்கடன் தள்ளுபடிக்கு ரூ.1000 கோடி; விவசாய கடன் தள்ளுபடிக்கு ரூ.2,393 கோடி ஒதுக்கீடு

By செய்திப்பிரிவு

சென்னை: விவசாயக் கடன் தள்ளுபடிக்கு 2,393 கோடி ரூபாயும், நகைக்கடன் தள்ளுபடிக்கு 1,000 கோடி ரூபாயும், சுய உதவிக்குழு கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கு 600 கோடி ரூபாயும் என மொத்தம் 3,993 கோடி ரூபாய் வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களையும், அதற்கான நிதி ஒதுக்கீட்டு விவரங்களையும் அவர் அறிவித்தார். அதன் விவரம்: தானிய சேமிப்புக் கொள்ளளவை அதிகரித்து, இழப்பினை குறைப்பதற்காக, 2021-22 ஆம் ஆண்டு முதல் 238 கோடி ரூபாய் செலவில் 2.86 லட்சம் மெட்ரிக் டன் சேமிப்புக் கொள்ளளவுடன் 213 கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், 28,000 மெட்ரிக் டன் சேமிப்புக் கொள்ளளவு கொண்ட 12 கிடங்குகள் 54 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகின்றன.

> இந்த அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள முக்கிய வாக்குறுதிகளான விவசாயக் கடன் தள்ளுபடிக்கு 2,393 கோடி ரூபாயும், நகைக்கடன் தள்ளுபடிக்கு 1,000 கோடி ரூபாயும், சுய உதவிக்குழு கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கு 600 கோடி ரூபாயும் என மொத்தம் 3,993 கோடி ரூபாய் வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் செயல்திறனையும் நிதி நிலையையும் மேம்படுத்த அடிப்படைச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கான, நீண்டகாலத் திட்டமொன்றை அரசு வகுக்கும். பொது விநியோகத் திட்டத்தில் உணவு மானியத்திற்காக, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 10,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம்மதிப்பீடுகளில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு 16,262 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. | வாசிக்க > தமிழ்நாடு பட்ஜெட் 2023 முக்கிய அம்சங்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE