விருதுநகரில் காயமடைந்த யானை 75 நாள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

By இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகரில் காயமடைந்து 75 நாள்களுக்கும் மேலாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த யானை லலிதா (65) இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த சேக் முகமது என்பவருக்குச் சொந்தமான 65 வயதான லலிதா என்ற பெண் யானை கடந்த ஜனவரி 2ம் தேதி விருதுநகரில் ஒரு பெருமாள் கோயிலுக்கு சொர்க்கவாசல் திறப்பு விழாவுக்கு கொண்டுவரப்பட்டது. லாரியிலிருந்து கீழே இறக்கியபோது பக்கவாட்டில் சரிந்து விழுந்து யானை பலத்த காயமடைந்தது.

திருவிழா முடிந்து மீண்டும் ராஜபாளையத்திற்கு அழைத்துச் செல்ல வனத்துறையினர் அனுமதி மறுத்ததால் விருதுநகர் ரயில்வே காலனி முத்து மாரியம்மன் கோயில் வளாகத்தில் கட்டிவைக்கப்பட்டு லலிதா யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே யானை லலிதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் காயங்கள் ஆறாமல் உள்ளதால் யானை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விலங்குகள் நல ஆர்வலர்கள் புகார் எழுப்பினர்.

தொடர் புகார் காரணமாக தனியாருக்குச் சொந்தமான இந்த யானையை வனத்துறையினர் கைப்பற்றி உரிய சிகிச்சை அளிக்குமாறு வனத்துறை தலைமை காட்டுயிர் பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி, மேகமலை வனச்சரக துணை இயக்குனர் திலீப்குமாருக்கு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, சிகிச்சை பெற்று வந்த யானை லலிதாவை மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் நேரில் வந்து பார்வையிட்டார்.

அதன்பின். யானை பராமரிப்பு தொடர்பாக உயர்நீதின்றம் தானாக முன்வந்து வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில், முதுமலையில் யானைகள் முகாமில் யானைகளுக்கான மருத்துவ முகாமில் பொறுப்பு வகித்த கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவர் கலைவாணன் விருதுநகரில் காயமடைந்துள்ள லலிதா யானையை பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்யவும், மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான பரிந்துரைகளை எடுத்துரைக்கவும் நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

மேலும், சிகிச்சை முறைகள் மற்றும் காயமடைந்த யானைக்கு சத்தாண உணவு வழங்கப்படுகிறதா என்பதையும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்காணிக்க வேண்டும், யானைக்கு விருதுநகரிலேயே தொடர்ந்து சிகிச்சை அளிக்கவும், சிகிச்சை முடியும் வரை பாகன் மற்றும் உதவி பாகனுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ஊதியத்தை விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு நிதியிலிருந்து வழங்கவும், ஒலி பெருக்கியால் தொல்லை ஏற்படுவதால் யானை லலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்படும் பகுதியில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த விருதுநகர் நகர் காவல் நிலைய ஆய்வாளருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

அதோடு, காயமடைந்த யானையை வனத்துறை தனது கட்டுப்பாட்டில் பராமரிக்கவும், கால்நடை துறையினர் மூலம் தொடர் சிகிச்சை அளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. யானையின் உடல்நிலை மற்றும் மருத்துவ சிகிச்சை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசபெருமாள், கோட்டாட்சியர் அனிதா, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் கோயில்ராஜ், கால்நடை மருத்துவர்கள் சரவணன், தங்கப்பாண்டி, மாயக்கண்ணன் ஆகியோரும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த நிலையில் கடந்த 75 நாட்களுக்கும் மேலாக தொடர் சிகிச்சை பெற்று வந்த யானை லலிதா இன்று அதிகாலை திடீரென மயங்கி கீழே விழுந்து சற்று நேரத்தில் உயிரிழந்தது. தகவலறிந்த கால்நடை மருத்துவர்கள் மாயக்கண்ணன், சுபலேகா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து யானையை பரிசோதனை செய்து இறப்பை உறுதி செய்தனர். தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலனும் இறந்த யானையை நேரில் வந்து பார்வையிட்டு பாகனிடம் விசாரணை மேற்கொண்டார்.

உயிரிழந்த லலிதா யானை விருதுநகரிலேயே அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கான இடத்தை வருவாய்த் துறையினர் தேர்வு செய்து வருகின்றனர். இடம் தேர்வு செய்யப்பட்ட பின்னர், இவ்விடத்திற்கு யானையின் சடலம் கொண்டு செல்லப்பட்டு கால்நடை மருத்துவர்களால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட உள்ளது. யானை லலிதா உயிரிழந்ததை கேள்விப்பட்ட பொதுமக்கள் பலரும் வந்து பார்த்து அஞ்சலி செலுத்தினர். யானை உயிரிழந்த சம்பவம் விலங்குகள் நல ஆர்வலர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE