வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கு: அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்தது சிறப்பு நீதிமன்றம்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீடு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு, ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது கடந்த 2012ம் ஆண்டு , அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் வழக்கறிஞர்கள் ரகுநாதன் மற்றும் ஏ.சரவணன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
"விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் வீட்டு வசதி வாரிய துறைக்கு எந்த ஒரு இழப்பும் ஏற்படவில்லை. சந்தை விலைக்குதான் வீடுகள் விற்கப்பட்டது.

இதில், அமைச்சர் உடந்தையாக இருந்தார் என்பதற்கு எந்தவொரு ஆதாரங்களும் இல்லை. மேலும் இந்த வழக்கைத் தொடர முறையான அனுமதி பெறவில்லை. இந்த புகாருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட இந்த வழக்கிலிருந்து அவரை விடுவிக்க வேண்டும்" என்று வாதிட்டனர்.

இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வீட்டுவசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து, உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE