சாலையோர புளிய மரங்களை அகற்றியதால் புளி உற்பத்தி பாதிப்பு: மாற்று வழி கோரும் கிருஷ்ணகிரி விவசாயிகள்

By செய்திப்பிரிவு

ஓசூர்: சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் சாலையோரம் இருந்த புளிய மரங்கள் அகற்றப்பட்டதால் புளி உற்பத்தி பாதிப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி பகுதி விவசாயிகள் வேதனை கூறியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, அஞ்செட்டி, கெலமங்கலம், யூ.புரம், ஊடேதுர்கம், உள்ளுகுறுக்கி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. விவசாயத்திற்கு பயன்படாத தரிசு நிலங்களில் நீண்ட காலம் பலன் தரும் புளிய மரங்களை விவசாயிகள் நடவு செய்து பராமரித்து வருகின்றனர். இப்பகுதியில் விளையும் புளி நல்ல சதைபற்றும், நல்ல சுவையானதாக இருக்கும் என்பதால், தமிழகம் மட்டும் அல்லாமல், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை புளி மகசூல் அறுவடை செய்யப்படும். வியாபாரிகள் விவசாயிகளிடம் புளியம் பழங்களை மேலோடுகளுடன் வாங்கி சென்று கூலி தொழிலாளிகளை கொண்டு ஓடு விதைகளை நீக்கி சுத்தப்படுத்தி அதனை குளிர்பதன கிடங்கில் வைத்து நல்ல விலை கிடைக்கும்போது, விற்பனை செய்கின்றனர். நிகழ்வாண்டில், அதிக மழை பெய்ததால், புளியில் ஒருவகையான நோய் தாக்கியதால் புளி வரத்து குறைந்துள்ளது. சாலையோரம் இருந்த புளியமரங்களும் அகற்றியதால் தற்போது உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை கூறியுள்ளனர்.

இது குறித்து உள்ளுகுறுக்கி கிராமத்தை சேர்ந்த விவசாயி பெரியண்ணன் கூறியதாவது: "கடந்த காலங்களில் புளியமரங்கள் சாலையோரங்களில் வளர்க்கப்பட்டது. அதனை ஏலம் எடுத்து சீசன் காலங்களில் புளியம் பழம் அறுவடை செய்து பதப்படுத்தி விற்பனை செய்து வந்தோம், சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் சாலையோரத்தில் இருந்த புளிய மரங்கள் வெட்டப்பட்டன. இதனால் சாலையோரங்களில் புளியமரங்களை பார்ப்பதே அரிதாக உள்ளது.

இதனால் விவசாய நிலங்களில் பயன் இல்லாத ஒதுக்குபுறத்தில் ஒன்று இரண்டு புளியமரங்களை வைத்து வளர்த்து வருகிறோம். அது எந்த பலனை எதிர்பார்காமல் ஆண்டுக்கு ஒரு முறை நமக்கு பலன் தருகிறது. நடப்பாண்டு புளியமரத்தில் பூக்கள் பூக்கும் சமயத்தில் தொடர் மழை பெய்ததால், அதில் கருப்பாக ஏதோ நோய் தாக்கி தரம் இல்லாமல் உள்ளது. அதே போல் அதிகளவில் பூக்களும் உதிர்ந்ததால், வரத்து குறைந்ததுள்ளது.

இதனால் ஆண்டுக்கு ஆயிரம் டன் புளி உற்பத்தி செய்த இப்பகுதிகளில், நிகழ்வாண்டில் 100 டன் புளிதான் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தரம் இல்லாத புளி விளைந்துள்ளதால், கடந்தாண்டு ரூ.120 வரை விற்பனை செய்த புளி தற்போது ரூ.85 க்கு விற்பனை செய்கிறது. மேலோட்டுடன், ரூ.35 விதை எடுத்தவை ரூ.60-க்கு விற்பனையாகிறது. தற்போது, சாலையோரத்தில் புளிய மரங்கள் அகற்றப்பட்ட நிலையில், பயன் இல்லாத விளை நிலங்களில் வளர்கப்பட்ட புளிய மரங்களையும், அகற்றிவிட்டு விளை நிலங்கள் வீட்டுமனையாக மாறி வருகிறது.

இதனால் தங்கள் பகுதியில் புளி உற்பத்தி ஆண்டுதோறும் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் வியாபாரிகள் ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் உற்பத்தி செய்யும் புளிகளை வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர். தரிசு நிலங்களில் புளிய மரங்கள் நடவு செய்ய விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE