சென்னை: உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக நீட் விலக்கு மசோதா அனுப்பப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் பதிலளித்துள்ளார் என்று சு.வெங்கடேசன் எம்பி, தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அனிதாக்களின் கல்வி உரிமை; குடியரசு தலைவரின் பதிலும் முதல்வரின் பெயர் சூட்டலும். தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகத்தை விரைவு செய்து ஒப்புதல் தரக்கோரி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
“உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது” என குடியரசு தலைவர் இன்று பதிலளித்துள்ளார். அரியலூர் மருத்துவ கல்லூரி அரங்கத்திற்கு அனிதாவின் பெயர் சூட்டி இன்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
மருத்துவ அரங்கும், மருத்துவக்கல்வியும் அனிதாக்களுக்கானது. அதை பறிப்பதை தடுக்கும் நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழகத்தின் கனவு அனிதாக்களின் கல்வி உரிமையை நிலைநாட்டுவதே" என்று பதிவிட்டுள்ளார்.
» சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க தொடர் கண்காணிப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
» தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023 | முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
முன்னதாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில், அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 22 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு “அனிதா நினைவு அரங்கம்” என்று பெயர் சூட்டப்படும் என்று அறிவித்திருந்தார்.