சென்னை: மாநிலம் முழுவதும் நேற்று நடந்த தேசிய லோக்-அதாலத்தில் 3,578 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.145.33 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட நிலுவை வழக்குகளுக்கான தேசிய லோக்-அதாலத், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா அறிவுறுத்தலின்படி நேற்று நடைபெற்றது. இதற்காக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.சவுந்தர், கே.ஜி.திலகவதி, ஆர்.கலைமதி ஆகியோரது தலைமையிலும், உயர் நீதிமன்றமதுரை கிளையில் நீதிபதிகள் எஸ்.ஸ்ரீமதி, எல்.விக்டோரியா கவுரி,கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோரது தலைமையிலும் என மொத்தம் 6 அமர்வுகள் அமைக்கப்பட்டன.
இதேபோல, மாநிலம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் மொத்தம் 133 அமர்வு அமைக்கப்பட்டது. இதில், மொத்தம் 3,578 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.145.33 கோடி இழப்பீடாக வழங்கஉத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர்செயலரும் மாவட்ட நீதிபதியுமான ஏ.நசீர் அகமது, உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும் மாவட்ட நீதிபதியுமான கே.சுதாஉள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.