சாலைகள் தரமாக அமைக்கப்படுகிறதா? - அதிகாலையில் சென்னை மேயர் ஆய்வு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் சாலைகள் தரமாக அமைக்கப்படுகிறதா என மேயர் ஆர்.பிரியா நேற்று அதிகாலை நேரில் ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில், நகர்ப்புர உட்கட்டமைப்பு நிதி மற்றும் சேமிப்பு நிதி, சிங்கார சென்னை2.0 ஆகிய திட்டங்களின் கீழ் ரூ.172கோடியே 70 லட்சம் செலவில் 226 கிமீ நீளத்தில் பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச்சாலைகள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறின்றி பணிகள் இரவில் நடைபெற்று வருகின்றன. மேயர் அறிவுரையின்படி இப்பணிகளை கண்காணிக்க மாநகராட்சி ஆணையர், அலுவலர்கள், பொறியாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அக்குழுவினர் கண்காணிப்பில் இந்த சாலைப் பணிகள் அனைத்தும் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மேயர் ஆர்.பிரியா நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் தேனாம்பேட்டை மண்டலம், வார்டு 110-க்கு உட்பட்ட வள்ளுவர் கோட்டம் பிரதான சாலையில் புதிதாக சாலையை அமைக்க பழைய சாலையினை அகழ்ந்தெடுக்கும் பணிகளையும், அண்ணா நகர் மண்டலம் வார்டு 101-க்குட்பட்ட அண்ணா நகர் முதல் பிரதான சாலையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புதிதாக சாலை அமைக்கும் பணிகளையும் திடீர் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE