மாசி மகத்தை முன்னிட்டு திருமானூரில் ஜல்லிக்கட்டு போட்டி - 200 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

By பெ.பாரதி

அரியலூர்: மாசி மகத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் திருமானூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

அரியலூர் மாவட்டம் திருமானூரில் ஆண்டுதோறும் மாசி மகத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவது வழக்கம். அதன்படி, இன்று தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியை மாநில போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது நிகழாண்டுக்கான அரியலூர் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஆகும்.

இதில், எம்எல்ஏ சின்னப்பா, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை அதிகாரிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர். போட்டியில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 300 காளைகளும், 200 மாடுபிடி வீரர்களும் அனுமதிக்கப்பட்டனர். வாடிவாசலிருந்து சீறி வந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கு ரொக்க பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதேபோல், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பணம் மற்றும் பரிசு பொருட்கள் விழா குழு சார்பில் வழங்கப்பட்டது.

இந்த போட்டியில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் பங்கேற்றன. ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான மக்கள் கண்டுகளித்தனர். அரியலூர் டிஎஸ்பி சங்கர் கணேஷ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE