நாகூர் அருகே கச்சா எண்ணெய் கசிவு - உடனடியாக நடவடிக்கை எடுக்க ஜி.கே. வாசன் கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அருகே குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கசிவதைத் தடுக்க சிபிசில் நிறுவனமும் தமிழக அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கப்பலுக்கு கச்சா எண்ணெயை கொண்டு செல்லும் நோக்கில் கடலுக்கு அடியில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமம் வரை இதற்கான குழாய் பதிக்கப்பட்டுள்ள நிலையில், பட்டினச்சேரி கடற்கரையில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கலந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்களும், மீனவர்களும் பாதுகாப்பற்ற தன்மையை உணர்கிறார்கள்.

ஏற்கனவே இதுபோல் 2 முறை குழாயில் கச்சா எண்ணெய் கசிந்த நிலையில் மீண்டும் கசிந்துள்ளதால் அப்பகுதி மக்கள், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என அஞ்சுகின்றனர். கச்சா எண்ணெய் கசிவதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதோடு, அனைத்து உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம். எனவே, கச்சா எண்ணெய் கடலில் கலப்பதால் மீன் இனங்கள் பாதிப்புக்குள்ளாகும்.

அடிக்கடி கச்சா எண்ணெய் கசிவதும் பிறகு குழாயின் உடைப்பு சரி செய்யப்படுவதுமாக இருப்பதால் அப்பகுதி மக்கள் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். கச்சா எண்ணெய் கசிவு சம்பந்தமாக எழுந்துள்ள பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காணப்பட வேண்டும். இனிமேல் கச்சா எண்ணெய் கசிவு ஏற்படாமல் இருக்க சிபிசில் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். கச்சா எண்ணெய் கசிவு ஏற்படாமல் இருப்பதை சிபிசில் நிறுவனம் உறுதி செய்ய வேண்டும். தமிழக அரசும் இது போன்ற கச்சா எண்ணெய் கசிவு இனிமேல் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE