புதுச்சேரியில் கருணாநிதிக்கு சிலை - முதல்வரிடம் திமுக-காங்கிரஸ் கோரிக்கை

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை புதுச்சேரியில் அரசு சார்பில் வைக்கக்கோரி முதல்வர் ரங்கசாமியிடம் திமுக மற்றும் காங்கிரஸ் சார்பில் மீண்டும் மனு அளிக்கப்பட்டது.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு புதுச்சேரி அரசு சார்பில் புதுச்சேரியில் சிலை அமைக்க வலியுறுத்தி, சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து இன்று மீண்டும் மனு அளித்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா, "தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு புதுச்சேரி அரசு சார்பில் சிலை அமைக்க வேண்டும் என்று புதுச்சேரி திமுக சார்பில் கோரிக்கை வைத்தோம். கடந்த 4ம் ஆண்டு நினைவு தினத்திலும் முதல்வரை நேரில் சந்தித்து சிலை நிறுவ வலியுறுத்தினோம்.

சிலை அமைப்பதாக முதல்வர் ரங்கசாமி அப்போது உறுதி தந்தார். ஆனால் அதற்கான முயற்சியை அரசு எடுக்காதது வருத்தம் தருகிறது. வரக்கூடிய கருணாநிதியின் நினைவு நாளுக்குள் புதுச்சேரி அரசு சார்பில் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று மீண்டும் மனு தந்தோம். சிலையை வைப்பதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். அப்படி சிலை வைக்காவிட்டால் எங்களுக்கும் காலம் வரும். அப்போது நாங்கள் வைப்போம்" என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE