சென்னை: மாவட்ட செயலாளர் கூட்டத்தில், திமுக அரசின் மக்கள் விரோதச் செயல்களை மக்களிடம் எடுத்துரைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை வழங்கியதாக அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளர் கூட்டம் குறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டக் கழகச் செயலாளர்களும், பிற மாநிலக் கழகச் செயலாளர்களும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும், திமுக அரசின் பல்வேறு மக்கள் விரோதச் செயல்களை பட்டிதொட்டியெங்கும் வாழும் மக்களிடம் எடுத்துரைப்பது குறித்தும் எடப்பாடி பழனிசாமி விரிவாக ஆலோசனை வழங்கினார்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.