கொடைக்கானலில் ஆரஞ்சு சீசன் நிறைவு - ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை

By ஆ.நல்லசிவன்

கொடைக்கானல்: கொடைக்கானலில் சீசன் நிறைவை எட்டியுள்ளதால் ஆரஞ்சு விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலாவுக்கு மட்டுமின்றி மலைக் காய்கறிகள், பழங்களுக்கும் பிரசித்தி பெற்றது. கொடைக்கானல், பெருமாள் மலை, அடுக்கம், தாண்டிக்குடி, பாச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் விளையும் வகைகள் கோடை ஆரஞ்சு மற்றும் கமலா ஆரஞ்சு என்று அழைக்கப் படுகிறது. இந்த பழத்தின் சாறும், இனிப்பு சுவையும் அதிகம் இருக்கும்.

இதனால் இப்பழத்திற்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் டன் கணக்கில் இந்த வகை ஆரஞ்சுகளை வாங்கி செல்வது உண்டு. ஆண்டுதோறும் கொடக்கானலில் அக்டோபர் மாதம் தொடங்கும் ஆரஞ்சு சீசன் பிப்ரவரி மாதத்தில் நிறைவடையும்.

சீசன் காலத்தில் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனையாகும். தற்போது சீசன் நிறைவை எட்டியுள்ளதால் பழங்கள் வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ ஆரஞ்சு ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கோடை காலம் நெருங்கி வருவதால், கொடைக்கானல் மலைப் பகுதியில் சாலையோரங்களில் விற்பனையாகும் ஆரஞ்சு பழங்களை சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE