தஞ்சாவூர் - பருத்திக்குடியில் பள்ளி மேற்கூரை விழுந்து 3-ம் வகுப்பு மாணவர் படுகாயம்

By சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள பருத்திக்குடியில் பள்ளி மேற்கூரை விழுந்து பள்ளி மாணவன் படுகாயம் அடைந்த நிகழ்வு பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

திருவிடைமருதூர் வட்டம், வளையாவட்டத்தில், பருத்திக்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. சுமார் 20 ஆண்டு பழமையான இப்பள்ளி கட்டிடத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 2 ஆசிரியர்கள் உள்பட 18 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடியும் நேரத்தில், பள்ளியின் மேற்கூரை திடிரென பெயர்ந்து விழுந்தது. அப்போது, அந்த இடத்தில் அமர்ந்திருந்த 3-ம் வகுப்பு படித்து வந்த விஷ்ணு (8) என்ற மாணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையறிந்த தலைமையாசிரியர் மல்லிகா, அம்மாணவரை, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.

அங்கு அவருக்குத் 20 தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனையறிந்த அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எம்பி செ.ராமலிங்கம் ஆகியோர் பார்வையிட்டு மாணவருக்கு தீவிர சிகிச்சையளிக்க அறிவுறுத்தினர். இது குறித்து திருவிடைமருதூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE