தருமபுரியில் மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலியான விவகாரம்: ஐகோர்ட்டில் அரசு அறிக்கை தாக்கல்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானைகளின் இரு குட்டிகளை, யானைகள் கூட்டத்துடன் சேர்க்க முயற்சிக்கப்படும் என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அருகே உள்ள காளிகவுண்டன் கொட்டாய் கிராமத்தில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி 2 பெண் யானைகள் மற்றும் ஒரு ஆண் யானை என மூன்று காட்டு யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. உயிர்தப்பிய இரண்டு குட்டி யானைகளை, பாதுகாத்து காட்டுக்குள் விட நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் மற்றும் வழக்கறிஞர் சொக்கலிங்கம் ஆகியோர், "தாயை இழந்து தவிக்கும் இரு குட்டியானைகளையும் யானைக் கூட்டத்துடன் சேர்க்க முயற்சிக்க வேண்டும். ஒருவேளை அந்த குட்டியானைகளை சேர்த்துக் கொள்ளாவிட்டால், அவற்றை முகாம்களில் வைத்து பராமரிக்க வேண்டும் என்பது தான் நடைமுறை.

ஏற்கெனவே தாயை பிரிந்த அம்முகுட்டி என்ற குட்டி யானையை மீண்டும் கூட்டத்தில் சேர்க்க முயற்சித்தபோது அதை சேர்த்துக் கொள்ளாததால் முதுமலை முகாமில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் "எலிபண்ட் விஸ்பர்ஸ்" என்ற பெயரில் ஆவணப்படம் எடுக்கப்பட்டு, ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், இறந்து கிடக்கும் யானைகளைச் சுற்றி குட்டி யானைகள் அழுதபடி சோகத்துடன் வலம் வருவது குறித்த காட்சிகள் நீதிபதிகளுக்கு காட்டப்பட்டன. இதை பார்த்த நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.

அப்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.சீனிவாசன், தமிழ்நாடு வனத்துறையின் அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்திருந்த விவசாயி முருகேசன் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இரு குட்டிகளை வனத்துறையினர் பாதுகாத்து, பராமரிக்க, உணவளிக்க ஒசூர் கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையில் 10 வனத்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. லேக்டோஜென், குளுகோஸ், குட்டி யானைகளுக்கு வழங்கப்படுகிறது.

அருகில் உள்ள வனப்பகுதியில் யானைகள் கூட்டத்தை அடையாளம் காண தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. யானைக் கூட்டம் கண்டுபிடிக்கப்பட்டதும் அதனுடன் இரு குட்டிகளையும் சேர்க்க முயற்சி எடுக்கப்படும். ஒருவேளை சேர்க்க முடியாவிட்டால் முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு மாற்றப்பட்டு பராமரிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், "மின்வேலியில் சிக்கி, யானைகள் பலியான சம்பவம் துரதிருஷ்டவசமானது. பாலக்காட்டில் இருந்து இரு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, குட்டி யானைகளுக்கு உணவு கொடுக்கப்பட்டுள்ளது. உரிய நடைமுறையை பின்பற்றி இரு குட்டி யானைகளும் பாதுகாக்கப்படும்" என தெரிவித்தார்.

இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், குட்டி யானைகளை கூட்டத்துடன் சேர்க்க ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். பின், இந்த வழக்கின் விசாரணையை வனபாதுபாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்