சுப்பிரமணியன் சுவாமி வழக்குக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சிங்கப்பூர் நிறுவனம் வாதம்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என சிங்கப்பூரைச் சேர்ந்த அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்துள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு, 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக சிங்கப்பூரைச் சேர்ந்த அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் நிறுவனம் குறித்து சுப்பிரமணியன் சுவாமி அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக அந்த நிறுவனம் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், இந்திய நீதிமன்றத்தில்தான் இந்த வழக்கை தொடர முடியும் எனக் கூறி, சிங்கப்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை தொடர்ந்து நடத்த அந்நிறுவனத்திற்கு தடை விதிக்க கோரி, சுப்பிரமணியன் சுவாமி 2014-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றதத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பிறப்பித்த தடை உத்தரவை எதிர்த்து, சிங்கப்பூர் நிறுவனம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மேல்முறையீடு வவழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த நிறுவனத்தின் தரப்பில், "சிங்கப்பூர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. முதன்மை நிறுவனம் சிங்கப்பூரில் அமைந்துள்ளதால், சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் எந்த தவறுமில்லை" என்று வாதிடப்பட்டது.

அப்போது சுப்பிரமணியன் சுவாமி தரப்பில், "சிங்கப்பூரில் முதன்மை நிறுவனம் அமைந்திருந்தாலும், சென்னையில் துணை நிறுவனம் உள்ளது. அந்நிறுவனத்தின் அதிகாரிகள் சென்னையில்தான் உள்ளனர். எனவே, இந்தியாவில் தான் வழக்கு தொடர முடியும்" என வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், எழுத்துபூர்வ வாதங்கள் தாக்கல் செய்வதற்காக விசாரணையை மார்ச் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE