வடமாநில தொழிலாளர்களின் அச்சத்தை போக்க இந்தியில் கலந்துரையாடிய கோவை ஆட்சியர்

By க.சக்திவேல்

கோவை: கோவை சிட்கோவில் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் ஆகியோர் இன்று (மார்ச் 4) இந்தியில் கலந்துரையாடினர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி செய்தியாளர்களிடம் கூறும்போது, "கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்தியில் வெளியிட்டபட்ட தகவல்களை வடமாநில தொழிலாளர்களுக்கு வழங்கி, அவர்களோடு கலந்துரையாடினோம். வாட்ஸ்அப்-ல் வந்த போலியான தகவல்களால் அவர்களிடையே பயம் ஏற்பட்டுள்ளது. அது தவறான தகவல். எனவே, யாரும் பயப்பட வேண்டாம் என்று தெரிவித்தோம். ஒருவேளை பயம் இருந்தால் எந்த எண்களை தொடர்புகொள்ள வேண்டும் என்று தெரிவித்தோம். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்தியில் வெளியிடப்பட்ட அறிவிப்பை வழங்கினோம்”என்றார்.

மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் கூறும்போது, "பொய்யான வீடியோக்கள் பரப்புவோரை கண்காணித்து வருகிறோம். ஒரு பிரபல இந்தி நாளிதழில் வெளியானதாக பொய்யான செய்தியை பரப்பியது தொடர்பாக கோவையில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனிப்படை போலீஸார் பீகார் சென்றுகொண்டிருக்கின்றனர். ஏதேனும் பிரச்சினை என தகவல் தொடர்புகொண்டால் கட்டுப்பாட்டு அறையில் பேசுவதற்காக இந்தியில் பேசும் காவலர்கள் 24 மணி நேரமும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்”என்றார். அப்போது, மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE