நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சேலம் மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து

By செய்திப்பிரிவு

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேலம் மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட 15 நாள் சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஆண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா என்பவர் தனக்கு சொந்தமான வீட்டை இடித்து, பொது சாலை அமைத்ததாக சேலம் மாநகராட்சி மீது குற்றம்சாட்டினார். வீட்டை மீண்டும் கட்டித்தரக் கோரி சேலம் மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் வீட்டை கட்டித் தர வேண்டுமென கடந்த 2001ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை அமல்படுத்தாததால் மாநகராட்சி ஆணையருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம், சேலம் மாநகராட்சி ஆணையருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து கடந்த 2014ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி மாநகராட்சி ஆணையர் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனையடுத்து, தண்டனையை ரத்து செய்ய மறுத்ததை எதிர்த்து மாநகராட்சி ஆணையர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேசமயம், மீண்டும் வீடு கட்டித் தர வேண்டுமென்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த இரு வழக்குகளும் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான, தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, "குறிப்பிட்ட அந்த நிலம் அரசுப் பொதுப்பாதை. மல்லிகாவிற்கு சொந்தமானது அல்ல. அரசுப் பொதுப் பாதையை ஆக்கிரமித்த தவறான தகவலை மறைத்து மல்லிகா தமக்கு சாதகமான தீர்ப்பை பெற்றுள்ளார். எனவே, சேலம் உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த இரண்டு உத்தரவுகளையும் ரத்து செய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

அரசுத்தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சேலம் உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த இரண்டு உத்தரவுகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE