சென்னை: 20 மணி நேரத்திற்கு பிறகு சென்னை மெட்ரோ ரயில் சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது.
சென்னையில் விம்கோ நகர் - விமான நிலையம் மற்றும் சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையத்துக்கும், பரங்கி மலைக்கும் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வரப்படுகிறது. இந்நிலையில், ஆலந்தூர் - நங்கநல்லூர் இடையே நேற்று (மார்ச்.3) சிக்னல் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையத்துக்குச் செல்லும் மெட்ரோ ரயில் சேவை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்பட்டது.
இதனால், இந்த வழித்தடத்தில் விமான நிலையம் செல்லும் பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து நீல வழித் தடத்தில் மாறி விமான நிலையத்துக்குச் சென்றனர். அதேபோல், விமான நிலையத்திலிருந்து கோயம்பேடு வழியாக சென்னை சென்ட்ரல் செல்லும் பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி பச்சை வழித் தடத்தில் மாறி கோயம்பேடு, ஷெனாய் நகர், எழும்பூர் வழியாகச் சென்னை சென்ட்ரலுக்கு சென்றனர்.
இந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு இன்று (மார்ச் 4) அதிகாலையில் சரி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 20 மணி நேரத்திற்கு பிறகு தற்போது சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை வழக்கம் போல் இயக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.