சென்னை | ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்தை இழந்தவர் தற்கொலை

By செய்திப்பிரிவு

சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தில் சுமார் 20 லட்சம் ரூபாய் பணத்தை இழந்த சென்னை - மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த மருத்துவ பிரதிநிதி வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாடம்பாக்கம் பகுதியில் உள்ள கணபதி காலனியில் உள்ள வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்.

தமிழகம் உட்பட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள், அதன் காரணமாக பொருளாதார ரீதியிலான இழப்புகளை எதிர்கொண்டு பலரும் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரதிநிதிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போது தற்கொலை செய்து கொண்ட வினோத்குமார் பல்வேறு கடன் வழங்கும் செயலிகள் மூலம் கடன் பெற்றுள்ளார். அந்த தொகையை கொண்டு அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தாலும், பணத்தை இழந்த காரணத்தாலும் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உயிரிழந்த வினோத்குமார் திருமணம் ஆனவர். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நள்ளிரவு நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார். தற்கொலைக்கு முன் அவர் கடிதம் ஒன்றும் எழுதி உள்ளார். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததாக வினோத்குமார் குறிப்பிட்டுள்ளதாக தகவல்.

தமிழக அரசு நிறைவேற்றியுள்ள ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டி உள்ளது. அதற்கான ஒப்புதலை அவர் விரைந்து வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE