திமுக ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றே இடைத்தேர்தல் வெற்றி: கே.எஸ்.அழகிரி

By செய்திப்பிரிவு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி திமுக ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ஈரோடு இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, "திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். முதல்வரின் 2 ஆண்டு கால ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றே இந்த இடைத்தேர்தல் வெற்றி. பெண்கள், உழைக்கும் மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த ஆட்சியின் செயல்பாடு திருப்தி அளித்துள்ளது என்ற நற்சான்று கிடைத்துள்ளது. குடிநீர், மின்சாரம் தடை இல்லாமல் கிடைக்கிறது. பெண்கள் கட்டணம் இல்லாமல் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள். இவைதான் இந்த வெற்றிக்கு காரணம்.

இது போன்று ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணமும் தமிழகத்தில் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஈவிகேஎஸ் குடும்பம் அரசியல் சார்ந்த கும்படும். 100 ஆண்டு காலம் தமிழகத்திற்கு அரும்பணி ஆற்றிய குடும்பம். முதல்வரின் அயராத பணி, தேர்தலில் அவர் காட்டிய ஆர்வம் மற்றும் ஒவ்வொரு நாளும் கூர்ந்து கவனத்து இந்த வெற்றியை எங்களுக்கு ஈட்டி கொடுத்துள்ளார்.

திமுக தலைமையிலான கூட்டணிக்கு தெளிவு இருந்தது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் எந்த தெளிவும் இல்லை. சலனத்தோடு இருந்தார்கள். சில இடங்களில் மோடி படத்தை பயன்படுத்தினார்கள். சில இடங்களில் பாஜக கொடியை கூட அதிமுக பயன்படுத்தவில்லை. இவை எல்லாம் தான் இந்த வெற்றிக்கு காரணம்." இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE